Applicable Translations हिन्दी සිංහල English Español ગુજરાતી عربي

இறைவன் (அல்லாஹ்) தன்னை சில போது மிகப்பெரும் மன்னிப்பாளன், மகா கருணையாளன் என்றும், சில சமயங்களில் கடுமையாக தண்டிப்பவன் என்றும் விவரிப்பது ஏன்?

மனித இயல்பையும், பலவீனத்தையும் கருத்தில் கொண்டு, விடாப்பிடியாக இன்றி பாவம் செய்வோரை அவர்கள் மனந்திருந்தி மன்னிப்புக் கோரினால் இறைவன் மன்னிப்பவனாகவும் அவர்களுடன் இரக்கமுள்ளவனாகவும் இருக்கிறான். இதில் இறைவனை சவாலுக்குட்படுத்துவது என்பது கிடையாது. இருப்பினும், இறைஇருப்பை மறுத்து, தன்னை சிலைகள் அல்லது விலங்குகளின் வடிவில் சித்தரிப்போரை, அல்லது மனந்திருந்தாமல் பாவச்செயல்களில் விடாப்பிடியாக நிலைத் திருப்பவர்களை கடுமையாக தண்டிப்பான். ஒருவன் மிருகத்தை அவமதித்தால், யாரும் அவனை குறை கூற மாட்டார்கள், ஆனால் அவர்கள் பெற்றோரை அவமதித்தால், அவர்கள் கடுமையாக கண்டனத்துக்கு ஆளாகுவார். அப்படியாயின், இந்த சமன்பாட்டை அவமதிப்பை படைப்பாளனான இறைவன் விவகாரத்தில் பிரயோகித்தால்;? அது இதை விட மிகப்பெரும் குற்றமல்லவா?! ஆகையினால் நாம் பாவத்தை சிறியதாக கருதக்கூடாது. மாறாக யாருக்கு மாறு செய்கிறோம் என்பதைத்தான் நாம் அவதானிக்க வேண்டும்.

தீமை அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருகிறதா?

தீமையானது இறைவன் புறத்திலிருந்து வருவதில்லை. தீமைகள் அடிப்படையில இருப்பியல் சார்ந்த விடயமல்ல. ஆக, இருப்பானது நன்மையின் மொத்த வடிவமாகும்.

உதாரணத்திற்கு ஒருவர் இன்னொருவரை, எழுந்து நடமாட முடியாத அளவு மிகக்கடுமையாக தாக்கிவிட்டார் என்றால் அவர் அநியாயம் என்ற பண்பை பெற்றவராக மாறிவிடுகிறார். அநியாயம் என்பது தீமையுமாகும்.

இருப்பினும், ஒரு தடியை எடுத்து மற்றொரு நபரைத் தாக்கும் ஒருவரிடம் அதிகார ஆற்றல் இருப்பது இயல்பிலேயே தீமை அல்ல.

இறைவன் அவனுக்கு வழங்கிய நாட்டம் அவனுள் இருப்பது தீமையல்ல.

அவனது கையை அசைக்கும் ஆற்றல் அவனிடம் காணப்படுவதும் தீமையல்ல.

தடியில் அடிக்கும் பண்பு இருப்பதும் தீமையல்ல.

இந்த இருத்தலியல் விடயங்கள் அனைத்தும், உண்மையில் நல்லவையாகும். நாம் ஏலவே குறிப்பிட்ட உதாரணத்தில் உள்ளது போல், தவறான பயன்பாட்டின் மூலம் எப்போது தீங்கு விளைவிப்பதாக அமையுமோ அப்போது மட்டுமே அவை அதற்குரிய தீய பண்புகளைப் பெறுகின்றன. இந்த எடுத்துக்காட்டின் அடிப்படையில், தேள் மற்றும் பாம்புகளின் இருப்பில் உண்மையில் எந்தத் தீங்கும் கிடையாது. அவைகளை எவராவது எதிர்கொள்வதினூடாக அவரை அவை தீண்டுவதன் மூலமே தீங்கு ஏற்படுகிறது. எனவே, இறைவனின் செயல்களில் தீமை கிடையாது. அவை முற்றிலும் நன்மையானவையாகும். மாறாக, தனது இறைவிதியின் மூலம் இடம்பெரும் நிகழ்வுகளில், அவற்றை தடுப்பதற்கான வல்லமையை பெற்றிருப்பினும் அதில் இறை நுட்பமும், மனிதர்களுக்கான அதிக நலன்களும் உள்ளடங்கியுள்ளன. ஆனால் மனிதன் இந்த நன்மைகளை பிழையான முறையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான்.

இயற்கை அனர்த்தங்கள் நிகழ்வதில் இறைவனின் நோக்கம்; யாது?

இறைவன் பௌதீக விதிகளையும் அவற்றை நிர்வகிக்கும் கோட்பாடுகளையும் வைத்துள்ளான். இப்பிரபஞ்சத்தில் முறைகேடு அல்லது சுற்றுச்சூழல் கோளாறு ஏற்பட்டால் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்கின்றது. அத்துடன் பூமியில் சீர்திருத்தமும் மிகச் சிறந்த வாழ்வும் தொடர வேண்டும் என்ற நோக்கில் இந்த சமநிலையின் இருப்பை அது பேணிப்பாதுகாக்கிறது. மக்களுக்கும் வாழ்க்கைக்கும் நன்மையளிப்பவை –பயனளிப்பவை மாத்திரமே எஞ்சியிருக்கும். ஏனையவை அழிந்துவிடும். பூமியில் பேரழிவுகள் ஏற்படும் போது நோய்கள், எரிமலைகள், பூகம்பம், வெள்ளம் போன்றவைகளால் , மனிதர்கள் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய சூழ்நிலைகளில், இறைவனின் திருப் பெயர்களான வலிமைமிக்கவன், குணப்படுத்துபவன் பாதுகாப்பாளன் போன்ற பெயர்கள் பிரதிபலிக்கின்றன. அதாவது நோயாளியை குணப்படுத்துவதிலும், அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டோரை பாதுகாப்பதிலும் அவனின் உயரிய திருநாமங்கள் வெளிப்படுகின்றன. அதேபோல், நீதியாளன் எனும் அவனின் திருநாமமானது பிறருக்கு அநியாயம் செய்தவன், மற்றும் பாவியை தண்டிப்பதிலும் வெளிப்படுகிறது. அதே நேரத்தில் அவன் ஞானமிக்கவன் எனும் திருநாமமானது பாவியல்லாதோரை சோதிப்பதில் பிரதிபலிக்கிறது. அதாவது ஒருவன் இறைவனின் சோதனையில் பொறுமை காத்தால் அவனுக்கு வெகுமதி வழங்கியும், யார் அவனின் சோதனையில் வெறுப்போடு நடந்து கொள்கிறானோ அவனுக்கு தண்டனை வழங்குவதன் மூலமும் கூலி வழங்குவதாகும். ஒரு மனிதன் தனது இரட்சகனின் அழகிய கொடைகளை –வெகுமதிகளை அறிந்து கொள்வது போல், இந்த சோதனைகள் மூலம் அவனது மகத்துவத்தையும் தெரிந்து கொள்கிறான். இறைவனின் அழகிய இறை பண்புகளை அறிந்து கொள்வதால் மாத்திரம் அவனை அறியமுடியாது மாறாக ஏனைய எல்லாப் பண்புகளையும் அறிந்திருத்தல் வேண்டும்.

சமகால சடவாத தத்துவஞானிகளில் பலர் நாத்திகத்தை ஏற்றுக் கொள்வதில் இவ்வுலகில் நிகழும் இன்னல்கள், தீமைகள் மற்றும் வலிகள் பின்னணியாக அமைந்தது. அவர்களுள் தத்துவஞானி 'அந்தோனி ஃப்ளு'வும் ஒருவர், அவர் இறப்பதற்கு முன் கடவுள் இருப்பதை ஒப்புக்கொண்டு 'கடவுள் இருக்கிறார்' என்ற புத்தகத்தை எழுதினார். இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் நாத்திகத்தில் ஒரு முக்கிய தலைவராக இருந்த போதிலும், கடவுள் இருப்பதை அவர் ஒப்புக்கொண்டபோது, அவர் பின்வருமாறு கூறினார்:

'மனித வாழ்க்கையில் தீமை மற்றும் துன்பம் இருப்பது கடவுளின் இருப்பை நிராகரிக்காது. ஆனால் தெய்வீக பண்புகளை மறுபரிசீலனை செய்ய நம்மை தூண்டுகிறது'. 'இந்த பேரழிவுகள் ஒரு நபரின் பௌதீகரீதியான திறன்களைத் தூண்டுவதால், பல நேர்மறையான அம்சங்களைக் கொண்டிருப்பதாக 'அந்தோனி ஃப்ளு', கருதுகிறார். அதாவது இந்தப் பேரழிவிலிருந்து காக்கவல்ல பல விடயங்களை புதிதாக கண்டுபிடிப்பதற்கான உத்வேகத்தை மனிதனுக்கு வழங்குவதுடன், சிறந்த உளவியல் பண்புகளைத் தூண்டி, மக்களுக்கு உதவ அவனை நிர்ப்பந்திக்கிறது. அத்துடன் வரலாறு முழுவதும் மனித நாகரிகங்களைக் கட்டியெழுப்பிய பெருமை தீங்கு மற்றும் இன்னலுக்கு உண்டு என்றும் அவர் கூறுகிறார். இந்த சிக்கலை தெளிவுபடுத்தவும் விளக்குவதற்கும் பல ஆய்வுக் கட்டுரைகள் தேவைப்படும். எனவே இதற்குரிய தெளிவை தரக்கூடியதாக மத விளக்கம் இருப்பதோடு அது மிகவும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும், வாழ்க்கையின் இயல்புக்கு மிகவும் இணக்கமாகவும் இருக்கிறது எனக் குறிப்பிடுகிறார்'. (கலாநிதி அம்ரு ஷரீபின் குராபதுல் இல்ஹாத் -பதிப்பு -2014 (நாஸ்தீக மூடநம்பிக்கை) என்ற நூலிலிருந்து பெறப்பட்டது). تقدم

உண்மையில், சில சமயங்களில் நம் சிறு குழந்தைகளை அறுவை சிகிச்சை அறைக்கு வயிற்றைக் கிழிப்பதற்காக அன்புடன் அழைத்துச் செல்வதைக் காண்கிறோம். இந்தத் தருனங்களில் வைத்தியரின் அறிவு, சிறியவர் மீதான அவரது அன்பு மற்றும் அந்தக் குழந்தையின் உயிரைக்காப்பதற்கான அவரின் ஆர்வம் போன்றவற்றில் நாங்கள் முழு நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்றால் படைப்பாளனான இறைவனின் வல்லமையிலும் அவனின் ஞானத்திலும் கருணையிலும் நம்பிக்கையற்று இருக்கிறோமல்லவா?! (தழுவல்: நூல் :நாத்திக புராணம் டாக்டர். அம்ரு ஷரீப். பதிப்பு 2014 ).

வாழ்க்கையில் தீமை இருப்பது கடவுள் இல்லை என்பதைக் காட்டுகிறதா?

இவ்வுலக வாழ்க்கையில் தீமைகள் இருப்பதற்கான காரணம் குறித்து கேள்வி கேட்பவர் கடவுளின் இருப்பை மறுப்பதற்கு நியாயம் தேடுவதையே நோக்காகக் கொண்டிருக்கிறார். இதன் மூலம் அவருடைய குறுகிய பார்வையையும் அதன் பின்னால் உள்ள ஞானத்தைப் பற்றிய அவரது சிந்தனையின் பலவீனத்தையும், உள்ளார்ந்த விஷயங்களைப் பற்றிய அறிவின்மையையும் நமக்கு வெளிப்படுத்துகிறார். மேலும் நாத்திகர் தனது கேள்வியின் மூலம் தீமை விதிவிலக்கு என்பதை மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

எனவே, தீமை தோன்றியதன் நுட்பம் பற்றி கேள்வி கேட்க முன், 'முதன்முதலில் நல்லது எப்படி வந்தது?' என்ற மிகவும் யதார்த்தமான கேள்வியைக் கேட்க வேண்டும்.

இதைவிடவும் மிக முக்கிய கேள்வியான ' நல்லதை படைத்தவன் யார்? என்பதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். இது மிகவும் முக்கியமான கேள்வி என்பதில் சந்தேகமும் இல்லை. அத்துடன் தொடக்கப் புள்ளி அல்லது அடிப்படை அல்லது நடைமுறையில் பரவலாக உள்ள கொள்கையில் நாம் உடன்பட வேண்டும். இவ்வுடன்பாடுகளின் பின் விதிவிலக்குகளுக்கான காரணங்களை நாம் தேட முடியும்.

விஞ்ஞானிகள் முதலில் பௌதிகவியல், இரசாயனவியல் மற்றும் உயிரியலுக்கான நிலையான மற்றும் குறிப்பிட்ட சில விதிகளை உருவாக்குகிறார்கள். பின்னர் அவர்கள் அந்த விதிகளில் விதிவிலக்கான மற்றும் அசாதாரண நிலைகளைக் குறித்து ஆய்வு செய்கின்றனர். இதேபோல், நாத்திகர்கள் அழகும், மிகச்சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்டதும் எண்ணற்ற பல காட்சிகளும் தோற்றப்பாடுகளும் நிறைந்த இவ்வுலகத்தின் இருப்பை முதலில் ஒப்புக் கொள்ளாத வரை, தீமை இருப்பதான அனுமானத்தை-கற்பிதத்தை- வெல்ல முடியாது.

சராசரி ஆயுட்காலம் முழுவதிலும் ஆரோக்கியமாக இருந்த காலப்பகுதியை நோய் ஏற்பட்ட காலங்களுடன் ஒப்பிடுவதன் மூலம், அல்லது பல தசாப்தங்களாக காணப்பட்ட செழிப்பு, முன்னேற்றத்தை, அழிவும் சேதமும், நாசமும் நிறைந்த காலங்களுடன் ஒப்பிடுவதன் மூலம், அதே போல் இயற்கையானது எவ்வித அனர்த்தங்களுமின்றி பல நூற்றாண்டுகளாக அமைதியும் இஸ்திரமாகவும் இருந்த காலப்பகுதியை நில நடுக்கம், எரிமலை வெடித்தல் போன்ற அனர்த்த காலப்பகுதிகளுடன் நாம் ஒப்பிட்டுப் பார்ப்போமேயானால் ஆரம்பத்தில் நிலவிய நன்மை அல்லது மேம்பாடு என்பது எங்கிருந்து வந்தது? தற்செயல் நிகழ்வுகளையும் குழப்பங்களையும் அடிப்படையாகக் கொண்ட உலகம் ஒரு நல்ல உலகத்தை உருவாக்கிட முடியாது.

அறிவியல் சோதனைகள் இதை உறுதிப்படுத்துவது நகைப்புக்குரியது. வெப்ப இயக்கவியலின் இரண்டாவது விதி, எந்தவொரு வெளிப்புற தாக்கமும் இல்லாமல் தனிமைப்படுத்தப்பட்ட அமைப்பில் மொத்த என்ட்ரோபி (கோளாறு அல்லது சீரற்ற தன்மை) எப்போதும் அதிகரிக்கும், மேலும் இந்த செயல்முறை மீள முடியாதது என்று கூறுகிறது.

வேறு வார்த்தையில் கூறுவதானால், ஒழுங்கமைக்கப்பட்ட பொருட்களுக்கு பக்கபலமாக அவற்றை தாங்கிக் கொள்ளக் கூடிய ஒரு பொருள் வெளியில் இல்லாதிருந்தால் அவை எப்பொழுதும் சரிந்து சிதறுண்டுவிடும். இந்த வகையில், அழகு, ஞானம், மகிழ்ச்சி மற்றும் அன்பு போன்ற அற்புதமான விஷயங்களில் தோன்றும் இந்த சீரற்ற நிகழ்வுகளை படைப்பாளன் ஒழுங்கமைக்காமல், வெப்ப இயக்கவியலானது தன்னிச்சையாக எதையும் உருவாக்கிடவோ அல்லது இறைவனின் படைப்பில் அது போன்ற ஒன்றை மிகச்சிறப்பான முறையில் செய்திடவோ முடியாது. இதற்கு முன்னர் நலவுதான் அடிப்படையென்றும் தீமை விதிவிலக்கானதென்றும் அங்கே வல்லமை மிக்க ஓர் இறைவன் உள்ளான், அவன் படைத்துத் திட்டமிட்டு நிர்வகிப்பவனாக உள்ளான் என்றும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.