Applicable Translations हिन्दी සිංහල English Español ગુજરાતી عربي

மனிதர்கள் மார்க்கத்திற்குப் பதிலாக பரிசோதனை அறிவியலை ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது.

தற்காலத்தில் அதிகமான மனிதர்கள், ஒளியானது காலத்திற்கு அப்பால் பட்ட ஒரு விடயம் என நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் படைப்பாளனான இறைவன் காலம் மற்றும் இடம் ஆகிய விதிகளுக்கு உட்படாதவன் என்பதை ஏற்றுக் கொள்வதில்லை. அதாவது அல்லாஹ் எல்லாப் பொருட்களும் படைக்கபட முன் ஆரம்ப கர்த்தாவாகவும் எல்லாப் படைப்பினங்களின் இறுதியானவனாகவும் உள்ளான். அவனின் படைப்புக்கள் எதனாலும் அவனை முழுமையாக அறிந்திட முடியாது.

அத்துடன் இணைக்கப்பட்ட மூலக்கூறுகள், சிலவற்றிலிருந்து சிலது பிரிக்கப்படும் வேளை அவை தொடர்ந்தும் ஒன்றோடொன்று தொடர்பில் இருக்கின்றன என பலர் நம்புகிறார்கள். அதே போன்று படைப்பாளனான இறைவன் தனது அறிவால் அடியார்களுடன் -அவர்கள் எங்கு சென்றாலும்-இருக்கிறான் என்ற கருத்தை நம்புவதில்லை! ஒருவருக்கு புத்தியுள்ளது என்பதை காணாமலே ஏற்கும் பலர் இறைவனை காணாது நம்புவதை ஏற்க மறுப்பது ஆச்சரியமான விடயமாகும்.

வேற்றுக் கிரகங்கள் இருப்பதை காணாமலே ஏற்கும் பலர் சுவர்க்கம் நரகம் இருப்பதை ஏற்றுகொள்ள மறுக்கின்றனர்!. பௌதீக அறிவியலானது காணல் போன்ற அடிப்படையிலே இல்லாத ஒன்றை ஏற்று நம்புமாறு கூறுகையில் அதனை நம்பி மனிதன் ஏற்றுக்கொள்கிறான். ஆனால் மரணத்தின் போது அவர்களுக்கு இல்லை என்று நிரூபிக்க பயன்பட்ட பௌதிகவியலோ (உயிரியல்), இராசயனவியலோ (வேதியல்) மனிதனுக்கு ஒரு போதும் பயனளிக்கமாட்டாது.

ஓர் எழுத்தாளரின் இருப்பை அவரின் புத்தகத்தை அறிந்து கொள்வதால் மாத்திரம் மனிதனுக்கு பொய்பித்திட முடியாது. அறிவியலானது பிரபஞ்ச விதிகளை கண்டுபிடித்தது. ஆனால் அதனை நிறுவவில்லை. ஏனெனில் படைப்பாளனே அதனை நிறுவியவன்.

பௌதிகவியல் மற்றும் இரசாயனவியல் துறைகளில் உயர் பட்டம் பெற்ற சிலரில் இறை நம்பிக்கையாளர் உள்ளனர். அவர்களைப் பொருத்தவரை இந்த பிரபஞ்ச விதிகளுக்கு அப்பால் மகத்தான ஒரு படைப்பாளன் இருப்பதை அவர்கள் அறிந்துள்ளனர். சடவாதிகள் நம்பும் பௌதீக அறிவியலானது இறைவன் படைத்த பிரபஞ்ச விதிகளைக் கண்டுபிடித்துள்ளது. ஆனால் அறிவியலானது அவ்விதிகளை படைக்கவில்லை என்பதை உணர வேண்டும். கடவுளால் உருவாக்கப்பட்ட இந்த விதிகள் இன்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்வதற்கான எதுவும் கிடையாது. இறைவிசுவாசம் இம்மையிலும் மறுமையிலும் விசுவாசிகளுக்கு நன்மை பயக்கும் அதே வேளையில், பிரபஞ்ச விதிகளை அறிந்து கற்றுக் கொள்வதன் மூலமாக அவர்களின் படைப்பாளன் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

ஒரு நபர் கடுமையான சளிக்காய்ச்சலால் அல்லது சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் சில வேளை ஒரு கோப்பை தண்ணீரைக் கூட குடிக்க முடியாத நிலை அவருக்கு ஏற்படும். இவ்வாறான பலவீனம் இருக்கும் நிலையில் தனது படைப்பாளனுடனான உறவு தேவையில்லை என்று அவனால் எப்படி இருக்க முடியும்?

விஞ்ஞானம் எப்போதும் தொடர் மாற்றத்திற்கு உட்படுபவை. புதிய கண்டுபிடிப்புகள் முந்தைய கோட்பாடுகளை முறியடிப்பதால், அறிவியலில் மாத்திரம் முழுமையான நம்பிக்கை கொள்வது அடிப்படையில் ஒரு பிரச்சினையாக உள்ளது. அறிவியல் என நாம் படித்தவற்றில் சில இன்னும் கோட்பாடாகவே இருக்கிறது! அவ்வாறு அறிவியல் கண்டுபிடித்தவை அனைத்தும் உறுதியானதும் துல்லியமானதுமாகும் என நாம் வைத்துக் கொண்டாலும் எமக்கு ஒரு சிக்கல் தொடரந்தும் இருந்து கொண்டிருக்கிறன. தற்போதைய அறிவியலானது படைப்பாளனை மறந்து விட்டு கண்டுபிடிப்பாளருக்குத்தான் எல்லா கண்ணியத்தையும், மரியாதையையும் வழங்குகிறது! இதற்கு பின்வரும் உதாரணமொன்றைக் குறிப்பிட முடியும். யாராவது ஒரு நபர் ஒரு அறையினுள் நுழைந்து அங்கே நேர்த்தியாக செய்யப்பட்ட அழகான ஒரு ஓவியத்தை கண்டெடுக்கிறார் என வைத்துக்கொள்வோம். பின்னர் வெளியே வந்து மக்களிடம் கண்டெடுத்த அந்த ஓவியம் பற்றி கூறுகிறார். அவர் கண்டெடுத்த அந்த ஓவியத்தைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். ஆனால் அவர்கள் ' இந்த ஓவியத்தை வரைந்தவர் யார்?' என்ற மிக முக்கிய கேள்வியை கேட்க மறந்து விடுகின்றனர். இவ்வாறுதான் இறை படைப்புகள் குறித்த விடயத்திலும் மனிதர்கள் நடந்து கொள்வதை நாம் பார்க்கிறோம். இயற்கை மற்றும் விண்வெளி விதிகள் தொடர்பான அறிவியல் கண்டுபிடிப்புகளால் ஈர்க்கப்பட்ட மனிதர்கள் இந்த விதிகளை உருவாக்கியவனின் துள்ளியமான படைப்பாற்றலை மறந்துவிடுகிறார்கள்.

அறிவியல் மூலம் மனிதன் ஒரு ஏவுகணையை செய்யலாம். ஆனால் அந்த அறிவின் மூலம் ஓவியத்தின் அழகிற்கு தீர்பளிக்கவோ, பொருட்களின் பெறுமதியை அளவீடு செய்திடவோ, நன்மை தீமை பற்றி அறியத்தரவோ அதனால் ஒரு போதும் முடியாது. அறிவியல் மூலம் தோட்டா கொல்லும் என நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் மற்றவர்களை கொல்வதற்காக அதனைப் பயன்படுத்துவது தவறு என்பதை நாம் அறிவதில்லை.

பிரபல இயற்பியலாளர் எல்பர்ட் ஐஸ்டீன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: 'அறிவியல் அறநெறியின் (ஒழுக்கத்தின்) ஆதாரமாக இருக்க முடியாது. அறிவியலுக்கு தார்மீக அடித்தளங்கள் உள்ளன என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அறநெறிக்கான அறிவியல் அடித்தளங்களைப் பற்றி எம்மால் பேச முடியாது. அற நெறியை அறிவியல் கோட்பாடுகளுக்கும் அதன் சமன்பாடுகளுக்கும் உட்படுத்தும் எல்லா முயற்சிகளும் தோல்வியடைந்துவிட்டது. எதிர்காலத்திலும் அது தோல்வியடையும்.

பிரபல ஜேர்மன் தத்துவஞானி இமானுவேல் கான்ட் கூறுகிறார்: 'கடவுள் இருப்பதற்கான தார்மீக ஆதாரம் நீதியின்படி நிறுவப்பட்டது, ஏனென்றால் நல்லவருக்கு வெகுமதி அளிக்கப்பட வேண்டும், தீயவர் தண்டிக்கப்பட வேண்டும். இது ஓர் உயர்ந்த மூலத்தின் முன்னிலையில், ஒவ்வொரு நபரும் அவர் செய்தவற்றைப் பற்றி விசாரிக்கப்படும்போதே இது உண்மையில் நிகழும். அதே போல் நல்லொழுக்கமும், மகிழ்ச்சியும் ஒன்றிணைவதற்கான அடிப்படையைக் கொண்டவை. அவை இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒன்றின் ஆளுகைக்கு கீழ் இருந்தாலேயன்றி ஒன்றினைய முடியாது. அவர்தான் யாவற்றையும் அறிந்த எல்லாவற்றிலும் ஆற்றல் படைத்த கடவுளாவார். இவ்வாறான உயர் மூலத்தைக் கொண்ட இயற்கைக்கு அப்பால் இருக்கும் ஒருவரே கடவுளாக பிரதிபலிக்க தகமையுடயவராவார்.

மதம் என்பது மக்களுக்கு அபினா? மதம் மக்களுக்கு போதையா?

உண்மை என்னவென்றால், சன்மார்க்கம் -மதம்- ஒரு கடமையும் பொறுப்பும் ஆகும். அது மனசாட்சியை விழிப்படையச் செய்கிறது, மேலும் ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய விஷயத்திலும் தன்னை சுயவிசாரணை செய்து கொள்ளும் படி விசுவாசியை தூண்டுகிறது. விசுவாசி தனக்கும், தன் குடும்பத்துக்கும், தன் அண்டை வீட்டாருக்கும், பாதையில் செல்லும் வழிப்போக்கனுக்கும் கூட பொறுப்பானவனாவான். அவன் தான் விரும்பும் விடயங்களை அடைந்து கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்ட பின்னர் கடவுளின் மீது அக்காரியங்களை ஒப்படைக்கிறான், இவ்வாறான செயற்பாடு அபினுக்கு அடிமையானோரின் குணாதிசயங்களில் ஒன்று என்று நான் நினைக்கவில்லை. (கலாநிதி அம்ரு ஷரீபின் குராபதுல் இல்ஹாத் -பதிப்பு -2014 (நாஸ்தீக மூடநம்பிக்கை) என்ற நூலிலிருந்து பெறப்பட்டது.). அபின் என்பது ஹெராயின் தயாரிக்கப் பயன்படும் கசகசா செடியிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு போதைப் பொருளாகும்.

மக்களின் உண்மையான அபின் போதை மத நம்பிக்கையல்ல, மாறாக நாத்திகவாதமாகும். நாத்திகம் தன்னைப் பின்பற்றுபவர்களை சடவாதத்திற்கு அழைக்கிறது. மதத்தை நிராகரிப்பதன் மூலமும், பொறுப்புகளையும் கடமைகளையும் கைவிட்டு, அதன் விளைவுகளைப் பொருட்படுத்தாமல் அவர்கள் வாழும் தருணத்தை அனுபவிக்கும்படி அவர்களைத் தூண்டுவதன் மூலமும் இறைத்தண்டனையைப் பொருட்படுத்தாது படைப்பாளனுடனான அவர்களின் உறவை புறந்தள்ளுகிறது. உலகத் தண்டனையிலிருந்து பாதுகாப்புக் கிடைக்கும் என்ற நிலை இருக்கையில் தன்னை கண்காணிக்கவும் விசாரிக்கவும் எவரும் கிடையாது, மற்றும் மரணத்தின் பின் உயிர்த்தெழுதல் மறுமை விசாரணை ஆகியன இல்லை என்ற நம்பிக்கையில் அவர்கள் விரும்பியதை செய்வரார்கள். அது உண்மையில் அபினுக்கு அடிமையானோரின் பண்புகளில் உள்ளவையல்லவா?